

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 26-ம் தேதி வெளியிடப்பட்டது.
அன்றுமுதல் தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதை தடுத்திடும் வகையிலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா 9 பறக்கும் படைகள் என மொத்தம் 27 குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் 118 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.1.73 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், கடந்த 23-ம் தேதி வரை உரிய ஆவணம் காண்பித்த நபர்களிடம் ரூ.1.37 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.