பின்னலாடைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை பறக்கும் படையினர் தாமதமின்றி அனுப்ப வேண்டும் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஏ.இ.பி.சி. கடிதம்

பின்னலாடைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை பறக்கும் படையினர் தாமதமின்றி அனுப்ப வேண்டும் :  தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஏ.இ.பி.சி. கடிதம்
Updated on
1 min read

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு, ஏ.இ.பி.சி. அகில இந்திய தலைவர் ஏ.சக்திவேல் அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பின்னலாடை நகரமான திருப்பூரில் இருந்து தினமும் பல கோடிக்கு பல்வேறு பகுதிகளுக்கு ஆடைகள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்த பின்னலாடைகள் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கப்பல்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்புகிறோம். தற்போது பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டந்தோறும் நியமிக்கப்பட்டு, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு பல இடங்களில் பின்னலாடைகளை ஏற்றி வரும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் காலதாமதம் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட நேரத்துக்குள் துறைமுகத்துக்கு ஆடைகள் கொண்டு செல்லப்படாமல் இருந்தால், கப்பல்கள் சென்றுவிடும். அப்போது ஆடைகளை வெளிநாடுகளில் இருக்கிற வர்த்தகர்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் வழங்க முடியாது. இதனால் ஆர்டர்கள் ரத்து உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். எனவே, உரிய ஆவணங்களுடன் பின்னலாடைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்தவுடன், காலதாமதமின்றி அனுப்பிவைக்க வேண்டும். இதுதொடர்பாக பறக்கும் படை அதிகாரிகளுக்கும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in