Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு :

நீலகிரி மாவட்டம் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த பின்பு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான வசதிகளை உறுதி செய்ய தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்குள் உள்ளே செல்லும் வழி, வெளியேறும் வழி, வாகனங்கள் நிறுத்தும் இடம், வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ண ஏதுவாக போடப்படும் மேஜை, முகவர்கள் வந்து செல்லும் வழி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக வைக்கும் அறை, வாக்கு எண்ணும் மையத்துக்கு வருவதற்கு ஏற்படுத்தப்படும் சாலை வசதிகள், 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் அறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், தேவையான மின்சாரம், குடிநீர், கழிப்பிட வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின், அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி, வாக்கு எண்ணும் நாளில் அனைத்து அலுவலர்களும் சிறப்பாக பணியாற்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x