

காஞ்சிபுரத்தில் தேர்தலுக்கான விழிப்புணர்வு வாசகங்களுடன் பட்டு சேலை நெய்து நெசவாளர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக நேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நமது இலக்கு 100 சதவீதம் வாக்குப் பதிவு என்று வாசகங்கள் அடங்கிய பட்டுச் சேலை கைத்தறி நெசவாளர்களால் நெய்யப்பட்டது.
இதனை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிமுகப்படுத்தி பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தினார். இந்த பட்டுச் சேலை உமாபதி என்பவரால் வடிவமைக்கப்பட்டு, கோவிந்தராஜ் என்பவரால் நெய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பி.ஜெயசுதா, கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குநர் கணேசன், நெசவாளர் கோவிந்தராஜ், வடிவமைப்பாளர் உமாபதி உட்பட பலர் பங்கேற்றனர்.