சுதந்திர இந்தியாவின் வைர விழா புகைப்பட கண்காட்சி தொடக்கம் : தஞ்சாவூரில் நாளை வரை நடைபெறுகிறது
தஞ்சாவூரில், சுதந்திர இந்தி யாவின் வைர விழா புகைப்பட கண்காட்சியை ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு விழா 2021 ஆக.15 தொடங்கி 2022 ஆக.15 வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில், தஞ்சாவூர் மணிமண்டப வளாகத்தில், சுதந்திர இந்தியாவின் வைர விழா புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தக் கண்காட்சியை ஆட்சியர் எம்.கோவிந்தராவ் நேற்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். முன்னதாக, கண்காட்சி வாயிலில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்தக் கண்காட்சியில், மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபபாய் படேல் போன்ற சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் அரிய புகைப் படங்கள் இடம்பெற்றுள்ளன.
தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலர் கே.ஆனந்த பிரபு, கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களின் வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகி களின் விவரம் குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணை யர் ஜானகி ரவீந்திரன், தஞ்சா வூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எம்.சீராளன், மக்கள் தொடர்பு கள விளம்பர உதவியாளர் எஸ்.அருண்குமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இந்தக் கண்காட்சி நாளை(மார்ச் 24) வரை காலை 9 மணியிலிருந்து இரவு 7 மணி வரை நடைபெறும்.
