Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM

காதல் திருமணம் செய்த மனைவி கொலை : காவல் நிலையத்தில் கணவர் சரண்

திருவள்ளூர் அருகே உள்ள மேல்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி(35). ஆட்டோ ஓட்டுநரான இவர் கடந்த சில ஆண்டுகளாக சென்னை, ஆலந்தூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார்.

அப்போது கோபிக்கும், ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த விவாகரத்தான மகேஸ்வரி(35) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் கடந்த பிப். 14-ம் தேதி பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், அவர்கள் மேல்நல்லாத்தூரில் தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபம் அடங்காத கோபி, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மகேஸ்வரியின் கழுத்தை கத்தியால் வெட்டியதில் அவர் உயிரிழந்தார். பிறகு, நேற்று அதிகாலை 3 மணியளவில் மணவாள நகர் காவல் நிலையத்தில் கோபி சரணடைந்து, மனைவியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார்.

திருவள்ளூர் தாலுகா போலீஸார், சம்பவ இடம் விரைந்து, மகேஸ்வரியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருவள்ளூர் தாலுகா போலீஸார், கோபியை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x