

திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா வைரஸ் இரண்டாவது அலை உலகமெங்கும் பரவத் தொடங்கியுள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், உடல் பலவீனமாக இருப்பவர்கள், சர்க்கரை நோய், இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள், நேரத்துக்கு சாப்பிடாதவர்கள், தூங்காதவர்கள், மனக்கவலை அதிகம் உள்ளவர்கள், நோய்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகளை நேரத்துக்கு சாப்பிடாதவர்கள், புற்றுநோய் பாதிப்பு இருப்பவர்கள் ஆகியோருக்கு தான் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, உயிரி ழப்புகளும் நிகழ்கின்றன.
சித்த மருத்துவத்தில் உள்ள தாளிசாதி சூரணம் வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்றத்தையும் சமநிலைப்படுத்தி, உடலைத் தேற்றக்கூடியது. இதில் 28 மூலிகைகள் அடங்கியுள்ளன. இது சளி, இருமல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, மூக்கடைப்பு, உடல் சொரி, சிரங்கு, வயிற்றுப்புண், வயிற்று வலி, சிறுநீர் உபாதைகள், காமாலை, சுரம், விஷச் சுரம், நிமோனியா காய்ச்சல், நிமோனியா நுரையீரல் தொற்று பாதிப்பு, அதிக தாகம், தொண்டை கரகரப்பு, பசியின்மை, நாள்பட்ட சளி உள்ளிட்ட பல்வேறு நோய்களை தீர்க்கக்கூடியது.
1 முதல் 12 வயது வரை 250 மில்லி கிராம்(கால் டீ ஸ்பூன்) 3 வேளைகளிலும், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு 500 மில்லி கிராம்(அரை டீ ஸ்பூன்) முதல் ஒரு கிராம் வரை 3 வேளைகளிலும் தேனில் கலந்து கொடுக்கலாம். இந்த மருந்து அனைத்து அரசு சித்த மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. கபசுர குடிநீர், தாளிசாதி சூரணம் ஆகியவற்றை சித்த மருத்துவர்களின் ஆலோசனையு டன் பயன் படுத்தி, கரோனா தொற்றிலிருந்தும், மேற்காணும் நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.