Published : 14 Mar 2021 03:15 AM
Last Updated : 14 Mar 2021 03:15 AM

சிறப்பு முகாம்களில் - இ-வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் சிக்கல் : பொதுமக்கள் அதிருப்தி

இ-வாக்காளர் அடையாள அட்டையைப் பெற நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில், ஊழியர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படாததால், வாக்காளர் அட்டையைப் பெற வந்தவர்கள் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்களுக்கு இணையதளம் மூலம் மின்னணு வாக்காளர் அட்டைவழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதுவரை இ-வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யாதவர்கள் எளிதாக பதிவிறக்கம் செய்துக் கொள்வதற்கு வசதியாகவும் நேற்றும் (13-ம் தேதி), இன்றும் (14-ம் தேதி), திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளவாக்குச்சாவடி மையங்களில்சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இச்சிறப்பு முகாம்களில் இணைய வசதியுடன் கூடியமடிக்கணினியும், அதை இயக்குவதற்கு தொழில்நுட்பப் பணியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டது. ஆனால்,நேற்று நடைபெற்ற இந்தச் சிறப்பு முகாம்களில் பங்கேற்ற ஊழியர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட எவ்வித வசதிகளும் செய்து தரப்படவில்லை.

இதனால், இ-வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்ய வந்தவர்களுக்கு, அதைப் பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், முகாம்களில் இருந்த ஊழியர்கள், வாக்காளர்களிடம் நீங்களே உங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினர்.

இதனால், முகாமுக்கு வந்த பொதுமக்கள் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x