மாலத்தீவில் சிறைபிடித்து விடுவிக்கப்பட்ட - 8 மீனவர்கள் தருவைக்குளம் திரும்பினர் :
மாலத்தீவில் சிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த 8 மீனவர்களும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று தங்களது படகுகளில் சொந்த ஊர் திரும்பினர்.
தூத்துக்குடி அருகேயுள்ள டி.சவேரியார்புரத்தை சேர்ந்த அந்தோணி மைக்கிள் பாரத், ஜான் சாமுவேல், அந்தோணி அருள்ராஜ், கனகராஜ், அபிஷேக் ராஜ், வெள்ளப்பட்டியை சேர்ந்த அந்தோணி ராபின், ராமநாதபுரம் நரிப்பையூரை சேர்ந்த ஜெபமாலை ராஜ், இருதயராஜ் ஆகிய 8 பேரும் தருவைக்குளத்தை சேர்ந்த விசைப்படகில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதிதிசைமாறி மாலத்தீவு கடல் எல்லைக்குள் இவர்கள் சென்றதையடுத்து 8 மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல் படையினர் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனர். மீனவர்களை மீட்கக் கோரி அவர்களது உறவினர்கள் கனிமொழி எம்பியிடமும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜுடமும் மனு அளித்தனர்.
எம்பியும், ஆட்சியரும் மேற்கொண்ட முயற்சியால் தமிழகஅரசு மீனவர்களை மீட்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில், கடந்த 9-ம் தேதி 8 மீனவர்களையும், படகையும் மாலத்தீவு அரசு விடுவித்தது. 8 மீனவர்களும் தங்களது விசைப்படகில் குல்குதுபுஷி தீவு பகுதியில் இருந்து புறப்பட்டு நேற்று காலை படகுடன் தருவைக்குளம் திரும்பினர். அவர்களை உறவினர்கள் வரவேற்றனர்.
