Published : 13 Mar 2021 03:13 AM
Last Updated : 13 Mar 2021 03:13 AM

தாம்பரம், ஆலந்தூர், பொன்னேரி, பள்ளிப்பட்டு பகுதிகளில் - ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் :

தாம்பரம், ஆலந்தூர், பொன்னேரி, பள்ளிப்பட்டு பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடியே 3 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே தச்சூர் பகுதியில் நேற்று காலை பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ரவி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, செங்குன்றம் பகுதியிலிருந்து, பொன்னேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற யுவராஜ், சரவணன் ஆகிய இளைஞர்கள் உரிய ஆவணங்களின்றி ரூ.5 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அத்தொகையை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில், தனியார் நிதி நிறுவன ஊழியர்களான யுவராஜ், சரவணன் ஆகியோர், தங்கள் நிறுவனத்தின் செங்குன்றம் கிளையிலிருந்து, பொன்னேரி கிளைக்கு ரூ.5 லட்சம் எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளது.

அதேபோல், திருத்தணி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று சிறப்பு வட்டாட்சியர் தேவி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அச்சோதனையில், ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்த பூர்ணசந்திரன், தங்கள் இல்ல திருமணத்துக்காக நகைகளை வாங்குவதற்காக ரூ.3.19 லட்சத்துடன் பள்ளிப்பட்டுக்கு வந்தது தெரிய வந்தது. ஆனால், உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்டதால் அப்பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூர் சுரங்கப்பாதை அருகே பரங்கிமலை போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தனியார் வங்கி ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்பும் 2 வாகனங்கள் அந்த வழியாக பணத்தை எடுத்துக் கொண்டு வந்தன. காவல் ஆய்வாளர் வளர்மதி அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது ஒரு வாகனத்தில் ரூ.85 லட்சமும், மற்றொரு வாகனத்தில் ரூ.8 லட்சமும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தன. இதைத் தொடர்ந்து ஆலந்தூர் தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து அந்தப் பணத்தையும், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

தாம்பரம் அருகே சேலையூர் கேம்ப் சாலையில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேம்ப் சாலையில் இருந்து மேடவாக்கம் நோக்கிச் சென்ற காரை சோதனையிட்டனர். அதில் உரிய கணக்கு இல்லாமல் ரூ.2 லட்சம் ரொக்கம் இருந்து. அதை பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் தாம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான ரவிச்சந்திரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தனியார் வங்கி ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்பும் 2 வாகனங்களில் ரூ.93 லட்சம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x