Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM

திருப்பூர், நீலகிரி மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு - வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு பணி மும்முரம் :

திருப்பூர் மாவட்டத்தின் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பல்லடம் மற்றும் திருப்பூர் (தெற்கு) வட்டாட்சியர் அலுவலக பாதுகாப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேற்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்காக திருப்பூர் ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டது. பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு அலுவலகத்தில் உள்ள கிடங்கிலிருந்து இன்று (மார்ச் 9) திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு, பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட உள்ளது.

வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, தாராபுரம் சார்-ஆட்சியர் பவன்குமார், தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் 3 சட்டப்பேரவைத் தொகுதிக்கு சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.இன்ன சென்ட்திவ்யா பார்வையிட்டார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை பார்வையிட்ட பின்பு ஆட்சியர் ஜெ.இன்னசென்ட்திவ்யா கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதியில் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் என மொத்தம் 3,845 இயந்திரங்கள் உள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில், அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

முழுமையான மற்றும் சரியான பாதுகாப்புகளுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x