

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சாலையில் விழிப்புணர்வு கோலங்கள் வரையப்பட்டன.
தமிழக சட்டப்பேரவை தேர்தல்ஏப்.6-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஊர்வலங்கள், முகாம்கள் உள்ளிட்டவற்றை மாவட்டம் முழுவதும் நடத்தி வருகிறது. இந்நிலையில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு கோலங்கள் நேற்று காலை வரையப்பட்டன.
வ.உ.சி. கல்லூரி எதிரே உள்ள தமிழ் சாலையில் மஸ்தூர் பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கலந்துகொண்டு 100 சதவீத வாக்களிப்பதை வலியுறுத்தி 15 கோலங்கள் வரைந்தனர். கரோனா தொற்று பரவல் இருப்பதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். ஜனநாயக கடமையான வாக்களிப்பதற்கு பணம் வாங்கக்கூடாது. வாக்குகளை விற்பனை செய்ய மாட்டோம்என வாக்காளர்கள் உறுதி எடுக்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கோலங்கள் வரையப்பட்டிருந்தன.
கோலங்களை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி,மாநகர நல அலுவலர் மருத்துவர் வித்யா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில், சுகாதார அலுவலர் கள், மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.