Published : 07 Mar 2021 03:17 AM
Last Updated : 07 Mar 2021 03:17 AM

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற முகாம்களில் - 760 காவல் துறையினருக்கு : ஒரே நாளில் கரோனா தடுப்பூசி :

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவல் துறையினருக்கு, வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நேற்று கரோனா தடுப்பூசி போடப்பட்டது. படம்:வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் காவல் துறையினருக்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் ஒரே நாளில் நேற்று 760 பேர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன் இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் காவல் துறையினருக்கு படிப்படியாக கரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், சட்டப் பேரவை தேர்தலில் ஈடுபட உள்ள காவல் துறையினர் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் நேதாஜி விளையாட் டரங்கில் காவல் துறையினருக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

இதில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தொடர்ந்து, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர் களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமில் வேலூர் மற்றும் காட்பாடி உட்கோட்டத்தைச் சேர்ந்த காவல் துறையினர் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் என 900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.

அதேபோல், குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. நேற்று ஒரே நாளில் நடந்த முகாம்களில் 760 பேர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x