Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் - 11 மாதங்களுக்குப் பிறகு நீச்சல் குளங்களை திறக்க அனுமதி :

திருவள்ளூர் மாவட்டத்தில் 11 மாதங்களுக்குப் பிறகு நீச்சல் குளங்களைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீச்சல்குளங்களும் கடந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி மூடப்பட்டன. தற்போது அரசு, சில தளர்வுகளுடன் நீச்சல் குளங்களை திறந்து போட்டிகளை நடத்தவும், பயிற்சிகளை மேற்கொள்ளவும் அனுமதியளித்துள்ளது.

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் 11 மாதங்களுக்குப் பிறகு, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பயன்படுத்தி நீச்சல் குளங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாவட்டத்தில் தொற்று உள்ள இடங்களில் செயல்படும் நீச்சல் குளங்களைத் திறக்க அனுமதி கிடையாது.

அனுமதி அளிக்கப்பட்டுள்ள நீச்சல் குளங்களைப் பயன்படுத்த 10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 65 வயதுக்கு கீழ் உள்ள நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நீச்சல் குளத்தைப் பயன்படுத்துபவர்கள் அதற்கான உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நீச்சல் குள வளாகத்துக்குள் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் வேண்டும்.

நீச்சல் குளத்தைப் பயன்படுத்துபவர்கள் நீந்துதல், உட்காருதல், குளித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும்போது 6 அடி இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.

நீச்சல் குளத்தில் கர்ப்பிணிகள் மற்றும் சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு அனுமதி கிடையாது. ஒவ்வொரு நீச்சல் வீரர், வீராங்கனை, பயிற்றுநரும் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்தல் வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x