காஞ்சிபுரம் மாவட்டத்தில்  12 பறக்கும் படைகள் நியமனம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 பறக்கும் படைகள் நியமனம்

Published on

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 12 பறக்கும் படை குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்பேரில், தேர்தல் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில், 21 தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்ட அனைத்து அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளில் திறம்பட செயல்படுதல் தொடர்பான அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்பி சண்முகபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கு முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கண்காணிப்பு அலுவலர், ஒளிப்பதிவாளர் மற்றும் போலீஸார் என 5 பேர் கொண்ட தலா 3 குழுக்கள் என 12 பறக்கும் படை குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in