அதிகாரிகள் மிரட்டுவதாகக்கூறி அங்கன்வாடி ஊழியர் தற்கொலை முயற்சி: வாட்ஸ் அப் வீடியோவால் பரபரப்பு

அதிகாரிகள் மிரட்டுவதாகக்கூறி அங்கன்வாடி ஊழியர் தற்கொலை முயற்சி: வாட்ஸ் அப் வீடியோவால் பரபரப்பு

Published on

அதிகாரிகள் மிரட்டுவதாகக்கூறி கரூரில் அங்கன்வாடி ஊழியர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சிக்கும் வீடியோ வாட்ஸ்அப்பில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அரசு காலனியைச் சேர்ந்தவர் சந்தியா(35). இவர் புலியூர் குளத்துப்பாளையம் அங்கன்வாடியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வாட்ஸ்அப்பில் ஆடியோ மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த ஆடியோவில் அவரை பெண் அதிகாரி ஒருவர் மிரட்டுவதாகவும், வீடியோவில், உடல்நிலை சரியில்லாத தன்னை ரெக்கார்டு எழுத அலுவலகம் வருமாறு அதிகாரிகள் மிரட்டுவதுடன், அங்கன்வாடியில் சர்வே நடத்தி சீல் வைக்கப்போவதாக கூறியதால் தூக்க மாத்திரைகளை சாப்பிடுவதாகவும் கூறி, மாத்திரைகளை வாயில் போட்டு தண்ணீர் குடிப்பது போல வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த சக ஊழியர்கள் சிலர், அங்கன்வாடி மையத்துக்குச் சென்று, அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்த பசுபதிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in