Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டு ரூ.13 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு வங்கி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

விவசாயம், சிறு மற்றும் குறு தொழில்கள் மற்றும் பிற முன்னுரிமைத் துறைகளுக்கு ரூ.13 ஆயிரத்து 336 கோடி கடன் வழங்க ஈரோடு மாவட்ட முன்னோடி வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில், வங்கி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், 2021-22-ம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டு ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது:

மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி தயாரித்த 2021-22-க்கான கடன் திட்ட அறிக்கையில், விவசாயத்திற்கு ரூ.6,677.99 கோடி, சிறு மற்றும் குறு தொழில்களுக்கு ரூ.3,802.09 கோடி, பிற முன்னுரிமைத் துறைகளுக்கு ரூ.2,859.81 கோடி என மொத்தம் ரூ.13 ஆயிரத்து 336 கோடியே 89 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இலக்கைவிட, இந்த ஆண்டு ரூ.1, 274.17 கோடி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்றார்.

கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் (கனரா வங்கி) எஸ்.அரவிந்தன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ஜெயந்தி, கால்நடை பராமரிப்பு பிராந்திய இணை இயக்குநர் (கூ.பொ) பிரிசில்லா மாலினி நிக்கல்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x