Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

எடை குறைவுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து இணை உணவு தொகுப்பு வழங்கல்

எடை குறைவுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து இணை உணவுத் தொகுப்பு வழங்கும் பணிகளை ராமநாதபுரம் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தேவிபட்டினம் கிராமத்தில் உள்ள ‘அன்னை சந்தியா’ அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து இணை உணவுத் தொகுப்பு வழங்கும் பணிகளைத் தொடங்கினார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் எம்.பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். அப்போது ஆட்சியர் கூறும்போது, மாவட்டத்தில் 200 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து இணை உணவுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு தொகுப்பிலும் ஒரு குழந்தைக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான பேரிட்சை, கடலை மிட்டாய், எள்ளுமிட்டாய் உள்ளன. இதற்காக கல்பாக்கம் அனுமின் நிலையம் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து மாதம்தோறும் தலா ரூ.1.80 லட்சம் செலவிடப்படுகிறது. தேர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைக்கு தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு இந்த உணவுத் தொகுப்பு வழங்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வி.ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x