

விடுதிகளில் தங்கி படிக்க விரும்பும் மாணவர்கள் மார்ச் 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. எனவே, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. விடுதியில் தங்கி படிக்க விரும்பும் மாணவர்கள் தங்களது புகைப்படம், வருமானம் மற்றும் சாதிச்சான்றிதழ், ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் மாவட்ட ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் மார்ச் 2-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்கலாம்.’’என தெரிவிக்கப்பட்டுள்ளது.