Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

புதுச்சேரியில் ஆட்சி கலைப்பு மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் மநீம, ஆம் ஆத்மி, சுசி கம்யூனிஸ்ட் அறிவிப்பு

புதுச்சேரியில் ஆட்சி கலைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும் என மக்கள் நீதி மய்யம், ஆம்ஆத்மி, சுசி கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி மக்கள் நீதிமய்யம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலர் சந்திரமோகன், ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் சீனிவாசன், சுசி கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் லெனின்துரை ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் ஜனநாயக விரோத முறையில் ஆட்சி கலைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மத்திய பாஜக அரசை வண்மையாக கண்டிக்கிறோம். மத்தியில் ஆளும் பாஜக அரசு, புதுச்சேரி காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியை செயல்படவிடாமல் கடந்த நான்கரை ஆண்டுகாலமாக பழிவாங்கி வந்தது. புதுச்சேரி காங்கிரஸ் அரசும், தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தாமல், வேலை வாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்கள் எதையும் செய்யாமல் மக்களால் வெறுக்கப்படும் அரசாகவே இருந்தது. இருப்பினும், புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்டு எந்தப் பதவிகளிலும் இல்லாத பாஜகவினர், மத்திய அரசு மூலம் துணைநிலை ஆளுநராக கிரண்பேடியை நியமித்து நெருக்கடிகளை கொடுத்தும், சட்ட விரோதமாக 3 நியமன உறுப்பினர்களை நியமித்தும், அரசை செயல்படுத்த விடாமல் பழிவாங்கி வந்தது.

இதனையடுத்து காங்கிரஸ்-திமுக எம்எல்ஏக்களை பாஜகவினர் அச்சுறுத்தியும், பணத்தாசை காட்டியும் ராஜினாமா செய்ய வைத்து, வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைக்கச் செய்துள்ளனர். இந்நிகழ்வு அப்பட்டமான ஜனநாயக படுகொலையாகும். இதைக் கண்டித்து விரைவில் எங்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x