Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

இரண்டாம் போக பாசனத்துக்காக கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் ஏக்கம் நிலம் பாசன வசதி பெறும்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் கெலவரப்பள்ளி அணை யில் இருந்து வலதுபுற மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் 2020-21-ம் ஆண்டுக்கான இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் கலந்து கொண்டு கெலவரப்பள்ளி அணையில் இருந்து வலதுபுற மற்றும் இடதுபுற கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட்டார்.

இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்கள் மூலமாக 5,918 ஏக்கரும், வலதுபுற பிரதான கால்வாய் மூலமாக 2,082 ஏக்கரும் என மொத்தம் 8 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்கள் பயன் அடைகின்றன. ஓசூர் மற்றும் சூளகிரி வட்டத்தில் உள்ள தட்டகானப்பள்ளி, பூதிநத்தம், பெத்தமுத்தாளி, முத்தாளி, அட்டூர், கதிரேப்பள்ளி, மாரசந்திரம், கொத்தூர், மோரனப்பள்ளி, தொரப்பள்ளி, திருச்சிப்பள்ளி, காமன் தொட்டி, தின்னூர், சுபகிரி, கோனேரிப்பள்ளி, சின்னகொல்லு, பெத்தகொல்லு, சாமனப்பள்ளி, சென்னத்தூர், அட்டகுறுக்கி, நல்லகான கொத்தப்பள்ளி, மார்த்தாண்டப் பள்ளி ஆகிய 22 கிராமங்கள் பயன் பெறுகின்றன.

அணையின் நீர் இருப்பு மற்றும் அணைக்கு வரும் நீர் வரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு 90 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதில் முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும். அடுத்த 5 நாட்கள் தண்ணீர் விடுவது நிறுத்தப்படும். இதுபோல மொத்தம் 6 முறை சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் வகையில் செயல்பட வேண்டும் என பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரன், பொதுப்பணித்துறை செயற் பொறி யாளர் (நீர்வள ஆதாரம்) ச.குமார், உதவி செயற் பொறி யாளர்கள் சிவசங்கர், கீதாலட்சுமி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x