Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் தஞ்சாவூர், திருச்சி, நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூரில் 1,502 பேர் கைது

திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூரில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 1,502 பேர் கைது செய்யப்பட்டனர்.

37 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் ரயிலடி அருகே காந்தி சாலையில் நேற்று நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் ராமாமிர்தம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தி.ரவிச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் வீராசாமி, பொருளாளர் சோமநாதராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், மறிலில் ஈடுபட்ட 21 ஆண்கள் உட்பட 230 பேரை மேற்கு காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.

திருச்சியில்...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.சத்தியவாணி தலைமையில் கருப்பு உடை அணிந்து திரண்ட சத்துணவு ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலச் செயலாளர் ஏ.பெரியசாமி, மாவட்டச் செயலாளர் கே.எம்.ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 300 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நாகையில்...

நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன் பொது அலுவலக சாலையில், கருப்பு உடை அணிந்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.தேன்மொழி தலைமையில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.ராஜூ உட்பட மறியலில் ஈடுபட்ட 202 பேரை வெளிப்பாளையம் போலீஸார் கைது செய்தனர்.

அரியலூரில்...

அரியலூர் அண்ணாசிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் 122 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பா.மாலா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கொளஞ்சியப்பன், மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கீதா, மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று பேசினார்.

பெரம்பலூரில்...

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கொளஞ்சி தலைமையில் கருப்பு உடை அணிந்து நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள் 235 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுக்கோட்டையில்...

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வெ.அன்னபூரணம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டத் தலைவர் ச.காமராஜ், மாவட்டச் செயலாளர் பெ.அன்பு, மாவட்ட துணைத் தலைவர் துரை.அரங்கசாமி உட்பட 287 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கரூரில்...

இதேபோல, கரூரில் நேற்று மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 126 பேர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x