Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

முத்துப்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் கொலை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(38). இவர், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஆலங்காடு பகுதியின் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர், அதிமுகவில் இணைந்தார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முத்துப்பேட்டையைச் சேர்ந்த அமமுக பிரமுகர் கோவிலூர் ஜெகனின் அண்ணன் மதன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜேஷ் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு திருவாரூர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று காலை ராஜேஷ் தனது இருசக்கர வாகனத்தில் முத்துப்பேட்டையில் இருந்து ஆலங்காட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். ஆலங்காடு அண்ணா சிலை அருகில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், ராஜேஷை விரட்டிச் சென்று, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். பின்னர், ராஜேஷின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற அவர்கள், முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். தகவலறிந்து வந்த முத்துப்பேட்டை போலீஸார், ராஜேஷின் தலையையும், உடலையும் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். கொலை நிகழ்ந்த இடத்தில் இருந்து, ஒரு துப்பாக்கியை கைப்பற்றியுள்ள போலீஸார், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, திருவாரூர் எஸ்பி துரை ஆகியோர், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராஜேஸுக்கு மனைவியும், 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x