

தமிழகத்தில் கரோனா பெருந் தொற்றால் கடந்த 11 மாதங்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 250 அரசு ஏசி பேருந்துகளை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எம்பவர் இந்தியா நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி, ஆராய்ச்சி நடுவம் அமைப்பின் செயல் இயக்குநர் ஆ.சங்கர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 250 அரசு ஏசி பேருந்துகள் மூலம் தினமும் ரூ.75 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக தெரிய வருகிறது. இப்பேருந்துகளில் சாதாரண கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்தனர்.
செப்டம்பர் மாதம் முதல் சாதாரண அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், ஏசி பேருந்துகள் மட்டும் இது வரை இயக்கப்படவில்லை. இதனால் ஏசி இயந்திரங்கள் பழுதடைந்து விடும். மேலும் டிக்கெட் வசூல் மூலம் தினமும் ஒரு பேருந்துக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ,50 ஆயிரம் வரை கிடைத்து வந்த வருவாயும் அரசுக்கு தற்போது கிடைக்காத நிலை உள்ளது. அதே நேரத்தில் தனியார் ஆம்னி ஏசி பேருந்துகள் ஏற்கெனவே இயக்கப்பட்டு வருகிறது.
இயல்பு வாழ்க்கை திரும்பி விட்ட தற்போதைய சூழலில் ஏசி பேருந்துகளை தமிழக அரசு உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.