Published : 16 Feb 2021 03:13 AM
Last Updated : 16 Feb 2021 03:13 AM

சக்கரக்கோட்டை கண்மாயை பறவைகள்சரணாலயமாக அறிவித்ததற்கு எதிர்ப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகேயுள்ளது ஆர்.எஸ்.மடை கிராமம். இக்கிராமத்தின் பாசனக் கண்மாயாக சக்கரக்கோட்டை கண்மாய் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கண்மாய் வனத்துறையால் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து வனத்துறையால் அப்பகுதியில் பறவைகளுக்காக நாட்டுக்கருவேல மரங்கள் நடப்பட்டன. குட்டைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் பறவைகள் சரணாலய அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என இக்கிராமத்தைச் சேர்ந்த சங்கர் கணேஷ், ராமர் தலைமையிலான கிராம மக்கள், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த சங்கர் கணேஷ் கூறியதாவது:

ஆர்.எஸ்.மடை, பால்கரை, அச்சடிப்பிரம்பு, கோவிந்தனேந்தல், வன்னிக்குடி ஆகிய கிராமங்களும், சக்கரக்கோட்டை, அம்மன்கோவில் ஆகிய கிராமங்களும் இக்கண்மாய் மூலம்தான் நீர்ப்பாசனத்தைப் பெறுகின்றன. கண்மாய் பரா மரிப்பு செய்யப்படாததாலும், காட்டுக்கருவேல மரங்கள் அதிக மாக உள்ளதாலும் இப்பகுதியில் தற்போது கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூகவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளன. பறவைகள் அதிகம் வராத கண்மாயை பறவைகள் சரணாலயம் என அறிவித்துள்ளனர். குட்டையில் தேங்கும் தண்ணீரை பாசனத்துக்குப் பயன்படுத்த வனத்துறை எதிர்ப்பு தெரிவிக்கிறது. கோடையில் பாகற்காய், வெள்ளரி பயிரிட முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். அதனால் இக்கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவித்ததை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x