ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி  மாணவர் உயிரிழப்பு

ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

Published on

ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 48 மணிநேர தேடலுக்குப் பிறகு உடல் மீட்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகேயுள்ள ஆத்தூர் நீர்த்தேக்கம் நிரம்பிக் காணப்படுகிறது. கல்லூரி மாணவரான சேடபட்டி கிராமத்தைச் சேர்ந்த கவுதம் (20) தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். நண்பர்கள் அளித்த தகவலின்பேரில் மாவட்டதீயணைப்பு அலுவலர் சுரேஷ்கண்ணா தலைமையில் தேடும் பணி நடந்தது. ஆனால், தொய்வு ஏற்பட்டது.

இதையடுத்து கூடுதல் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு 60 பேர் பல்வேறு குழுக்களாகப் படகுகள் மூலம் தேடினர். 48 மணி நேரத் தேடுதலுக்குப் பின் ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் இருந்து கவுதம் உடல் மீட்கப்பட்டது. செம்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in