Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நூற்பாலை சங்கங்களுக்கு வலியுறுத்தல்

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டுமென, நூற்பாலை சங்கங்களுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 200 ஏற்றுமதியாளர்கள் இணைந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டமைப்பு, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேஷன், கோவை சைமா, இந்திய ஜவுளித்தொழில் சம்மேளனம், இந்திய நூற்பாலை சங்கம் ஆகியவற்றுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு நேற்று அனுப்பிய கடிதத்தில், "நூல் விலை உயர்வுக்கேற்ப ஆடைகளின் விலையை உயர்த்தி வழங்க வெளிநாட்டு வர்த்தகர்கள் மறுத்து வருகிறார்கள். இதனால், ஆர்டர்கள் ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே பெற்ற ஆர்டர்களுக்கும் ஆடைகளை தயாரிக்க முடியாமல், ஏற்றுமதி நிறுவனங்கள் சிக்கலை சந்திக்கின்றன. பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஒசைரி நூல் விலையை கிலோவுக்கு ரூ.30 வரை குறைக்க வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் இருந்த நூல் விலையே தொடர வேண்டும். இந்த கோரிக்கையை நூற்பாலைகள் பரிசீலிக்க வேண்டும். நூல் விலையை குறைத்து அறிவிக்க வேண்டும். நூல் விலை குறையாதபட்சத்தில், அனைத்து நிறுவனங்களின் உற்பத்தியும் முடங்கும். பின்னர், நிறுவனங்களே முடங்கும் அபாய நிலை ஏற்படும். நூற்பாலைகள் நூல் விலையை குறைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x