Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM
புதுப்பட்டினம் புறவழிச் சாலையின் குறுக்கே அமைந்துள்ள குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து விபத்து ஏற்படுவதால், குழாய் சீரமைப்பு பணிகளை தரமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்பாக்கம் நகரியப் பகுதிக்கு பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீரை கொண்டு வருவதற்காக ஈசிஆர் சாலையோரம் ராட்சத இரும்பு குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளன. இதில், புதுப்பட்டினம் பழைய விஏஓ அலுவலகம் எதிரே குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிந்து சாலையில் வழிந்தோடுகிறது.
குழாய் உடைப்பை சீரமைக்கும் பொதுப்பணித் துறையினர் சரியானமுறையில் பணிகளை மேற்கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், குழாய் உடைப்பு ஏற்படும் பகுதியில் சாலை உள்வாங்கி இரவு நேரங்களில் சாலையில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
தற்போது மேற்கண்ட பகுதியில் உள்ள குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து உரிய தொழில்நுட்ப முறையில் உடைப்பை சீரமைத்து மீண்டும் உடைப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, “புதுப்பட்டினம் அருகே ஈசிஆர் சாலையோரம் உள்ள குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மீண்டும் உடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT