Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM
தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள பத்ரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகள் முத்துலட்சுமி (15). இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நாகாவதி ஆற்றில் தோழிகளுடன் குளிக்கச் சென்றார். அங்கு ஆழமான பகுதிக்குச் சென்ற முத்துலட்சுமி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதனிடையே நேற்று பெரும்பாலையில் ஒரே பகுதியில் 3 இடங்களில் முத்துலட்சுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
நாகாவதி அணையில் இருந்து கால்வாய் அமைக்கும் பணிக்காக, ஆற்றில் ஆழமாக குழி தோண்டி மணல் எடுக்கப்பட்டது. இந்த குழியில் தேங்கியிருந்த தண்ணீரில் ஆழமான பகுதி என தெரியாமல் சென்ற முத்துலட்சுமி மூழ்கி உயிரிழந்தார்.
மணல் எடுக்கப்பட்ட பின்பு குழியை ஒப்பந்ததாரர் மூடியிருக்க வேண்டும். ஒப்பந்ததாரரின் அலட்சியம் தான் உயிரிழப்புக்கு காரணம். எனவே தொடர்புடைய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தகவலறிந்து வந்த பெரும்பாலை போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT