என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் கூடுதல் இழப்பீடு

என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் கூடுதல் இழப்பீடு
Updated on
1 min read

என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கு வதற்காக கடந்த மாதம் 18-ம் தேதி மற்றும் கடந்த 6-ம் தேதி ஆகிய இரு தினங்களில் நெய்வேலியில் மக்கள் நீதி மன்ற அமர்வுகள் நடைபெற்றன.

மொத்தம் 119 நபர்களுக்கு ரூ.8 கோடியே 7 லட்சத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டன. முன்பு ஏக்கருக்கு ரூ.5 லட்சம் முதல் 15 லட்சம் வரை என்எல்சி வழங்கியிருந்தது. அரசு வழங்கும் வழிகாட்டுதல் மதிப்பை விட கூடுதலாக இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என 01.01.2014க்கு பிறகு அந்நிறுவனத்திற்கு தங்கள் நிலங்களை வழங்கியவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மன்றத்தின் உறுப்பினர்கள் முன்னிலையில் என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கும், நிலம் வழங்கியவர் களுக்கும் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி, அந்நிலங்களுக்கு ஏற்கெனவே வழங்கிய அனைவருக்கும் ஏக்கருக்கு ரூ.15 லட்சம் வழங்க இருதரப்பிலும் ஒத்துக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து கடந்த 6-ம் தேதி, நெய்வேலி, வட்டம்-20, கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில், என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு தங்கள் 48.34 ஏக்கர் பரப்பிலான நிலங்களை வழங்கிய 63 நபர்களுக்கு, மொத்தம் 4 கோடியே 34 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன.முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி மக்கள் நீதிமன்ற அமர்வில், 45.24 ஏக்கர் பரப்பிலான தங்கள் நிலங்களை வழங்கிய மொத்தம் 56 நபர்களுக்கு ரூ.3 கோடியே 73 லட்சத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இதனை என்எல்சி இந்தியா நிறுவனம் நேற்று வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in