Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

எஸ்.பெரியபாளையம் குடியிருப்பு பகுதியில் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிப்பதாக புகார்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், அலைபேசி வாயிலாக நேற்று நடைபெற்றது. ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேரில் வந்தும் மனுக்களை அளித்தனர்.

திருப்பூர் எஸ்.பெரியபாளையம் ஏ.சி.எஸ். மாடர்ன் சிட்டி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் சுமார் 70 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஓராண்டாக குடியிருப்பு பகுதியில்குடிநீர் பிரச்சினை நிலவுகிறது.

இதுதொடர்பாக கிராமசபைக்கூட்டத்திலும் மனு அளித்துள்ளோம். 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருகிறது.

இதுகுறித்து ஊராட்சித் தலைவரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடிநீரை விலை கொடுத்துவாங்க வேண்டிய நிலை உள்ளது. கூலி வேலைக்கு சென்று பிழைத்து வருகிறோம். கரோனா பாதிப்பால் வேலையின்றியும் சிரமப்படுகிறோம். எனவே, குடிநீர் உட்பட அடிப்படைபிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆக்கிரமிப்பு

கே.வி.ஆர். குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியிலுள்ள நீர்வழி ஓடையின் பெரும் பகுதி தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. அதை அகற்றக் கோரி ஏற்கெனவே மனு அளித்தும் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இருந்த சுவடே இல்லாத அளவுக்கு, தற்போது நீர்வழி ஓடை ஆக்கிரமிப்பில் உள்ளது. இதேபோல, குடியிருப்புகளுக்கு செல்லும் வழிகளையும் தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மகனை மீட்க...

திருப்பூர்-பெருமாநல்லூர் சாலை திருமலை நகர் தெற்கு வீதியை சேர்ந்த ஜே.தாஜ் என்ற பெண் அளித்த மனுவில், "எனது மகன் மஹபூப் பாஷா (எ) அபு (20). கடந்த22-ம் தேதி கல்லூரி தேர்வுக் கட்டணம் செலுத்திவிட்டு வருவதாக சென்றவர், நண்பர்களுடன் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துள்ளார். அப்போது தவறி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் மகனை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. மீட்பு பணிகளை துரிதப்படுத்தி, உடனடியாக மகனை மீட்டுத்தர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை, குடிநீர் வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக 66 அழைப்புகள் வரப்பெற்றன. புகார்கள் மற்றும் குறைகள் மீது விசாரணை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x