பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.75,000 மானியம்  விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல்

பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.75,000 மானியம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல்

Published on

பண்ணைக் குட்டைகள் அமைக்கரூ.75,000 வரை மானியம் வழங்கப்பட்டு வருவதால் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட 61 கோரிக்கைகள் உரிய துறைகளுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற விவரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. இதையடுத்து தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் பேசியதாவது:

தோட்டக் கலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு தோட்டக் கலைப் பண்ணைகளில் மண் புழு உரம், செறிவூட்டப்பட்ட தொழு உரம், பஞ்சகவ்யம், தசகவ்யம் போன்ற இயற்கை உரங்கள் விற்பனைக்குத் தயாராக உள்ளன. தேவைப்படும் விவசாயி கள் பெற்றுக்கொள்ளலாம். மண் புழு உரக்கூடாரம் அமைக்க ரூ.50,000மானியம் வழங்கப்படுகிறது.அதேபோல, ஒருங்கிணைந்த தோட்டக் கலை வளர்ச்சி இயக்கத் திட்டத்தின்கீழ் பண்ணைக் குட்டைகள்அமைக்க ரூ.75,000 வரை மானியம் வழங்கப்பட்டு வருவதால் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் விண்ணப்பித்து பயனடையலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியின்போது, 42 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு இயற்கை விவசாயம் செய்வதற்கான அங்கக மாறுதலுக்கான ஸ்கோப் சான்றிதழ்களை விவசாயிகளிடம், ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் வாஞ்சிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in