புகழூர் டிஎன்பிஎல் முப்பெரும் விழா

புகழூர் டிஎன்பிஎல் முப்பெரும் விழா
Updated on
1 min read

புகழூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் சமுதாயப் பொங்கல் விழா, முன்களப் பணியாளர்களை கவுரவிக்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு செய்தித்தாள்காகித நிறுவன குடியிருப்பு வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள 108 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பொங்கல் வைக்க தேவையான மண்பானை, சில்வர்வாளி, அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன செயல் இயக்குநர் (இயக்கம்) எஸ்விஆர் கிருஷ்ணன் விழாவை தொடங்கி வைத்தார். முதன்மைப் பொதுமேலாளர் (வணிகம், மின்சாரம், கருவியியல்) ஏ.பாலசுப்பிரமணியன், முதன் மைப் பொதுமேலாளர் (உற்பத்தி) கு.தங்கராஜு, துணைப் பொதுமேலாளர் (நிதி) சுபா ஷிஸ்தே ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முதன்மைப் பொதுமேலாளர் (மனிதவளம்) பா.பட்டாபிராமன் வரவேற்றார். பெண்கள் பொங்கல் வைத்த பிறகு, சூரியனுக்கு படைக்கப்பட்டு சூரிய வழிபாடு நடைபெற்றது.

பின்னர், டிஎன்பிஎல் பேரூராட்சி துப்புரவு, அலுவலகப் பணியாளர்கள், ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், டிஎன்பிஎல் செய்தொழில் சுகாதார மைய மருத்துவர்கள், செவிலியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், குடியிருப்பு வளாக அத்தியாவசியத் துறையைச் சார்ந்த கட்டுமான, மின்சாரப் பராமரிப்பு பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். டிஎன்பிஎல் நிறுவனத்தின் சமுதாய நலப்பணித்திட்டத்தின் கீழ் ரூ.4.09 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in