Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM

வேலூர் மாவட்டத்தில் கோயில் காவலர்களுக்கு8 மாதங்கள் சம்பள பாக்கி முன்னாள் ராணுவ வீரர்கள் புகார்

வேலூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இரவு காவலர்களாக பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒன்று திரண்டு நேற்று முறையிட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 35 முக்கியமான கோயில்களின் பாதுகாப்புக்காக இரவு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அனைவரும் முன்னாள் ராணுவ வீரர்கள். மாவட்ட காவல் துறை சார்பில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள், கோயில் உள்ள பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணியில் இருக்கிறார்களா? என்பதை இரவு ரோந்து காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள கோயில் இரவு காவலர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. கரோனா ஊரடங்கு நிதி தட்டுப்பாட்டை காரணம் காட்டி இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட காவல் நிர்வாகத்தில் ஏற்கெனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப் படுகிறது.

இந்நிலையில், கோயில் இரவு காவலர்கள் 15-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் தில் ஒன்று திரண்டு தங்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினர். அவர்களை, காவலர்கள் சமாதானம் செய்தனர்.

பின்னர், அவர்களிடம் தனிப்பிரிவு காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், அரசிடம் இருந்து நிதி வரப்பெற்றதும் அனைவருக்கும் சம்பளம் உடனடியாக வழங்கப்படும் என சமாதானம் கூறி அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x