திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தேர் உற்சவம்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில்  பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தேர் உற்சவம்
Updated on
1 min read

கரோனா தடுப்பு நடவடிக்கையால் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் நேற்று எளிமையாக தேர்த் திருவிழா நடைபெற்றது.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் கடந்த 9-ம் தேதி தை பிரம்மோற்சவ விழா தொடங்கியது. வரும் 18-ம் தேதி வரை நடைபெற உள்ள இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர்த் திருவிழா நேற்று நடைபெற்றது.

வழக்கமாக வீரராகவ பெருமாள் கோயிலின் 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட பெரிய தேர் தேரடியில் புறப்பட்டு குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக மீண்டும் தேரடியை வந்தடையும்.

ஆனால் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோயில் நிர்வாகத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட சிறிய தேர், நேற்று காலை சன்னதி தெருவில் உள்ள நாலுகால் மண்டபத்தை சுற்றி வலம் வந்தது.

எளிமையாக நடந்த இந்த திருவிழாவில், வண்ண மலர்கள், தங்க, வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வீரராகவ பெருமாள், தேவி, பூதேவியுடன் தேரில் உலா சென்றார்.

இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in