Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழையால் சேதமடைந்துள்ள பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க கோரிக்கை

திருப்பூர்

அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழையால் சேதமடைந்துள்ள நிலக்கடலை, சோளப் பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென கோரி்க்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு பாரதிய கிஷான் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் மா.வேலுசாமி அனுப்பியுள்ள மனுவில், "திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைகாசி பட்டத்தில் விவசாயிகள் நிலக்கடலை பயிர் செய்தனர். அறுவடை நேரத்தில் பெய்த கன மழையால் நிலக்கடலை விளைச்சல் சரியில்லாமல், கொடிகளும் சேதமாகிவிட்டன. இதேபோல, கால்நடைகளுக்கு தீவனம் வேண்டி பயிர் செய்யப்பட்ட சோளப் பயிர்களும் சேதமாகி விட்டன.

இதனால் விவசாயிகள்செய்வதறியாது தவிக்கின்றனர். நடப்பு ஆண்டு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. ஆனால் கிணறுகள், குளம், குட்டைகள் நிறையும் அளவுக்கு மழை பெய்யவில்லை.

ஒரு காலத்தில் தினக்கூலி ரூ.5-ஆக இருந்தபோது மஞ்சள்குவிண்டால் ரூ.3 ஆயிரத்துக்கும், ரூ.100-ஆக இருந்தபோது குவிண்டால் ரூ.18 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தற்போது கூலி ரூ.900-ஆக உள்ள நிலையில்,குவிண்டால் ரூ.5 ஆயிரத்துக்குதான் விற்பனையாகிறது.

ஆனால், விளை பொருளுக்கான விலை குறைந்து வருகிறது. இந்த விவகாரத்தில், விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை முட்டுவழிச் செலவுகளின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும்.

தற்போது பெய்த மழையால் சேதமடைந்த நிலக்கடலை மற்றும் சோளப் பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x