Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோயில் விழா 15-ம் தேதி தொடக்கம்

உடுமலை:உடுமலையை அடுத்த சோமவாரப்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் ஆல்கொண்டமால் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 3 நாட்கள் தமிழர் திருநாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். கரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பலகட்ட ஆலோசனைக்கு பிறகு தாமதமாக தொடங்கின. அழைப்பிதழ் கூட அச்சடிக்காத நிலையில், தற்காலிக கடைகள் அமைக்கவும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தவும் யாரும் முன்வரவில்லை.

கடந்த ஆண்டு தற்காலிக கடைகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த ஏலம் விட்டதன்மூலம் ரூ.10.60 லட்சம் கோயிலுக்கு வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.வரும் 15-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை கோயிலில் தமிழர் திருவிழா நடைபெற உள்ளது. கால்நடைகளின் நலனுக்காக தங்கள் மாட்டு வண்டிகளில் கோயிலுக்கு வந்து வழிபடுவதும், தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் கோயிலுக்குள் கால்நடைகளைக் கொண்டு சென்று வழிபடும் முறை பின்பற்றப்படுவதும் சிறப்பு. மேலும் நேர்த்திக் கடனாக கால்நடைகளை உபயம் வழங்கும் முறையும், மண்ணால் செய்த பசு, காளை, குதிரை, நாய், பூனை ஆகிய பொம்மைகளை காணிக்கையாக வழங்கும் விநோத வழக்கமும் இக்கோயில் பக்தர்களிடையே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x