Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

தீவிரவாதிகளின் கடல்வழி ஊடுருவலை தடுக்க தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை இன்றும் நடைபெறும் என போலீஸார் தகவல்

தீவிரவாதிகளின் கடல்வழி ஊடுருவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இன்று இரண்டாவது நாளாக நடைபெற உள்ளது.

கடல்வழியாக புகுந்த தீவிரவாதிகள் கடந்த 2008-ம்ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்தினார்கள். இதில், 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதன் பிறகு ஆண்டுதோறும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகைநடத்தப்படுகிறது.

அதன்படி, தமிழக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடத்தப்பட்டது. இதில், கடலோர பாதுகாப்புப் படை வீரர்களுடன் உள்ளூர் போலீஸார் இணைந்து செயல்பட்டனர்.

காசிமேடு துறைமுகம்

அதன்படி தீவிரவாதிகள் போல் வேடமிட்டு கடல்வழியாக ஊடுருவி வரும் பாதுகாப்புப் படையினரை உள்ளூர் போலீஸார் அடையாளம் கண்டு கைதுசெய்ய வேண்டும். சென்னையில் வடசென்னை, தென் சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சென்னை பெருநகர போலீஸார் கடலோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.

காசிமேடு துறைமுகம் பகுதியில் படகு ஒன்றில் தீவிரவாதிகள் போல் வேடமிட்ட பாதுகாப்புப் படையினர் சென்றனர். அவர்களை போலீஸார் விரட்டி பிடித்து அவர்கள் வைத்திருந்த டம்மி வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.

நுைழவாயில்களில் சோதனை

இதேபோல், டிஜிபி அலுவலகம் மற்றும் காவல் ஆணையர் அலுவலக நுழைவாயில்களிலும் சோதனைக்கு பிறகே போலீஸார் உள்ளிட்ட அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் இன்றும் நடைபெற உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x