Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
பொங்கல் விழா நெருங்குவதால் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச் சந்தையில் நேற்று ரூ.3 கோடி மதிப்புக்கு வர்த்தகம் நடந்தது.
தருமபுரி மாவட்டம் நல்லம் பள்ளியில் வாரம்தோறும் செவ்வாய்க் கிழமையில் வாரச் சந்தை கூடுவது வழக்கம். நாளை (14-ம் தேதி) பொங்கல் விழா வரவுள்ள நிலையில் நேற்று நல்லம்பள்ளியில் கூடிய வாரச் சந்தையில் பல்வேறு பொருட்களை வாங்கிச் செல்ல சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் திரண்டனர்.
அதிகாலையில் தொடங்கி 11 மணி வரை நடந்த கால்நடை சந்தையில் ஆடு, கோழி விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. பொங்கல் விழாவின் இறுதி நாளான காணும் பொங்கல் நாளில்(கரிநாள்) பலரது வீடுகளில் அசைவ உணவு இடம்பிடிக்கும். அதற்காக, கிராம மக்கள் முன்னதாகவே நேற்றைய சந்தையின்போது கோழி, ஆடுகளை வாங்கிச் சென்றனர். கால்நடைச் சந்தை முடிவுக்கு வந்தவுடன் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், பொங்கல் விழாவுக்கு தேவையான பானை, அடுப்பு, கரும்பு, மஞ்சள் கொத்து, வண்ணப்பொடி, கோலப் பொடி உள்ளிட்ட பொருட்கள், கால்நடைகளை அலங்கரிக்கும் கயிறுகள், மணிகள் என பல வகை பொருட்களின் வர்த்தகம் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
கால்நடை இனங்கள், மளிகை உள்ளிட்ட பொருட்கள் என நேற்றைய சந்தையின்போது ரூ.3 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் நடந்திருக்கும் என வியாபாரிகள் சிலர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT