Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி கடற்கரையில் பகவதியம்மன் கோயிலுக்கு சொந்தமான கடைகள் உள்ள பகுதியில் கடந்த 9-ம் தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த 63 கடைகள் எரிந்து சேதமடைந்தன. பொங்கல் மற்றும் கோடை விடுமுறை சீஸனுக்காக கடைகளில் கொள்முதல் செய்து வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகிவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்திருந்தனர்.
தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்து நிவாரணம் கோர வியாபாரிகள் முடிவு செய்தனர். அதன்படி தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் சென்னை சென்ற பகவதியம்மன் திருக்கோயில் வளாக வியாபாரிகள் சங்கத்தினர், முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர். அப்போது, அதே இடத்தில் மீண்டும் கடைகள் அமைத்து தர வேண்டும். சேதமாகிய பொருட்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மனு அளித்தனர். கடைகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.
இந்நிலையில், கன்னியாகுமரியில் தீ விபத்து நடந்த பகுதியை தளவாய் சுந்தரம் பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT