நீட் தேர்வு வழக்கு  இடைத்தரகரை விசாரிக்க அனுமதி

நீட் தேர்வு வழக்கு இடைத்தரகரை விசாரிக்க அனுமதி

Published on

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் வழக்கில் இடைத்தரகர் ரஷீத்தை சிபிசிஐடி போலீஸார் மூன்று நாள் காவலில் விசாரிக்க தேனி நீதிமன்றம் அனுமதி அளித்தது.

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு தொடர்பாக தேனி சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதில் மாணவர்கள், பெற்றோர், இடைத்தரகர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

முக்கியக் குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த ரஷீத்தை போலீஸார் கடந்த ஓராண்டாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர் தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரண் அடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். ரஷீத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு தாக்கல் செய்தது. இது குறித்த விசாரணை நேற்று நடைபெற்றது. 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் கோரினர். நீதிபதி பன்னீர்செல்வம் 3 நாள் அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து மதுரை சிபிசிஐடி.அலுவலகத்துக்கு ரஷீத் அழைத்துச் செல்லப்பட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in