மயிலாடுதுறை- திருச்சி வழித்தடத்தில் அனைத்து ரயில்களையும் இயக்க கோரிக்கை

மயிலாடுதுறை- திருச்சி வழித்தடத்தில் அனைத்து ரயில்களையும் இயக்க கோரிக்கை

Published on

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கத்தின் 57-வது ஆண்டு இறுதி பொது பேரவைக்கூட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, துணைத் தலைவர் ஜமீல் தலைமை வகித்தார். முனைவர் த.மனோகரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், பொங்கல் பண்டிகையின்போது பயணிகள் அருகிலுள்ள ஊர்களுக்கு சென்றுவர வசதியாக மயிலாடுதுறை- திருச்சி ரயில் பாதையில் அனைத்து ரயில்களையும் உடனடியாக இயக்க வேண்டும். பயணிகள் பயன்பாடு மிகுந்த பாபநாசம் ரயில் நிலையத்தில் சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் விரைவு ரயில் மற்றும் மயிலாடுதுறை- மைசூர் விரைவு ரயில் ஆகியவை மீண்டும் நின்றுசெல்ல வேண்டும்.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பெரும்பாலான ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளதால், விழுப்புரம்- மயிலாடுதுறை- திருச்சி, மயிலாடுதுறை- திருவாரூர் மற்றும் காரைக்கால் - தஞ்சாவூர்- திருச்சி ஆகிய ரயில் பாதைகளில் இயங்கும் சாதாரண பயணிகள் ரயில்களை மெயின் லைன் மின்சார ரயில்களாக இயக்கவும், மயிலாடுதுறையில் மின்சார தொடர் ரயில்களுக்கான பணிமனை அமைக்கவும் வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், 2020-23-ம் ஆண்டுக்கான புதிய தலைவராக பி.கே.டி.சண்முகம், துணைத் தலைவராக ஜமீல், செயலாளராக ஏ.கிரி, பொருளாளராக எம்.மாறன், இணைச் செயலாளர்களாக சி.சுப்ரமணியன், டி.சரவணன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in