மதுபானக் கடையை அகற்ற கோரி கொட்டும் மழையில் மக்கள் போராட்டம்

மதுபானக் கடையை அகற்ற கோரி கொட்டும் மழையில் மக்கள் போராட்டம்
Updated on
1 min read

திருப்பூர் மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்டது செல்லம் நகர். இங்கு செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

நேற்று கொட்டும் மழையில் மதுக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, “எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக்கடையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறோம். மாலை வேளைகளில் பெண்கள் சுதந்திரமாக வெளியே சென்று வர முடியவில்லை. மதுப் பழக்கத்துக்கு அடிமையான பலரால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அளவுக்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. இது தொடர்பாகஎங்கள் தொகுதி சட்டப்பேரவைஉறுப்பினரிடம் மனு அளித்தோம்.

மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தோம். இருதரப்பிலும் நடவடிக்கை இல்லை. தற்போது டாஸ்மாக் கடையை அகற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in