

குரூப்-1 தேர்வுக்கு பழைய நடைமுறையில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித் துள்ளதால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு வரும் ஜன.3-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வர்களை அறிவுறுத்தியிருந்தது. ஆனால், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேஷன்(ஓடிஆர்) ஐடியுடன் ஆதார் கார்டு எண்ணை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியும் என தேர்வாணையம் கூறியது. இதனால் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாமல் தேர்வர்கள் தவித்தனர். தேர்வர்களின் சிரமங்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வணையம், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்த நடைமுறையை தற்காலிகமாக தளர்த்துவதாக அறிவித்துள்ளது. அதனால், இன்று (டிச.27) முதல் ஓடிஆர் மூலமாக அல்லாமல் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும், வரும் ஜனவரி 9 மற்றும் 10-ம் தேதி நடக்க உள்ள உதவி இயக்குநர் (தொழில் மற்றும் வணிகம்) பதவிக்கான தேர்வுக்கும் இந்த அடிப்படையிலேயே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளது.