Published : 22 Dec 2020 03:16 AM
Last Updated : 22 Dec 2020 03:16 AM

2 மாணவிகள் மர்ம உயிரிழப்புக்கு நீதி வேண்டும்தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தல்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பள்ளி மாணவிகள் இறப்புக்கு நீதி வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், ஆமைப்பாக்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குறவர் இன பள்ளி மாணவிகள் இருவர் மர்மமான முறையில் இறந்த நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் உள்ளது. எனவே, இது தொடர்பாக தமிழக அரசு சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லும் இந்நேரத்தில், வெகு விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய தண்டனை கிடைக்க தமிழக வாழ்வுரிமை கட்சி துணை நிற்கும்.

குழந்தைகளை இழந்து பரிதவித்து நிற்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு, தகுந்த இழப்பீடும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் தருவதே அக்குடும்பத்துக்கு அரசு செய்யும் குறைந்தபட்ச ஆறுதலாக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x