

புலம் பெயர்ந்து அயல்நாடுகள், இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்காக, மேடைத்தமிழில் பேசுதல் குறித்த புதிய பயிற்சிப் படிப்பு தொடங்கப்பட உள்ளது என்று தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
‘வணக்கம் மலேசியா’ ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர் மையத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.
நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றுப் போட்டியின் நேரலைத் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தர் பாலசுப்ரமணியன் பேசியதாவது:
ஒருமொழி, உயிர்ப்புடன் தலைமுறைகளைக் கடந்து வாழவேண்டும் என்றால், அம்மொழி,பேச்சுவழக்கில் பயன்படுத்தப்பட வேண்டும். நல்ல மேடைத்தமிழ்ப் பேச்சு பலருக்கும் அன்றாட வாழ்வில் மொழியைப் பயன்படுத்துவதற்கு உந்துதலாக அமையும். மேடைத்தமிழை ஆற்றலுடன் வெளிப்படுத்த பல நுணுக்கங்கள் தேவைப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, புலம் பெயர்ந்து அயல்நாடுகள், இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்காக மேடையில் பேசும் கலையைப் பயிற்றுவிக்கும் படிப்பை தொடங்க முடிவெடுத்துள்ளோம். இணையதளம்வாயிலாக நடத்தப்படவுள்ள சான்றிதழ் நிலை அளவிலான இப்படிப்பு சிறந்த தமிழ்ப்பேச்சாளர்களைக் கொண்டு நடத்தப்படும் என்றார்.