சூளகிரி அருகே கொத்தமல்லி வியாபாரி படுகொலை

சூளகிரி அருகே கொத்தமல்லி வியாபாரி படுகொலை
Updated on
1 min read

சூளகிரி அருகே கொத்தமல்லி வியாபாரி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள தொட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜப்பா (55). இவர் கொத்தமல்லி, புதினா வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், மகள்கள் உள்ளனர்.

நேற்று காலை ராஜப்பா, சூளகிரி - கும்பளம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தை மறித்த மர்ம கும்பல், அவர் முகத்தில் மிளகாய் பொடி தூவியது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜப்பா அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். விரட்டிச் சென்ற மர்ம கும்பல், ராஜப்பாவை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.

தகவலறிந்து வந்த சூளகிரி போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜப்பாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. இதுதொடர்பாக ஏற்கெனவே சூளகிரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று ராஜப்பாவை மர்ம கும்பல் கொலை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஓசூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு முடிந்து நேற்று மாலை ராஜப்பாவின் உடல் தொட்டூர் கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடலை வாங்க மறுத்த உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, சூளகிரி - கும்பளம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த சூளகிரி இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in