ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் செயல்படுத்தப்பட்டாலும் பொருட்கள் வழங்குவதில் பிரச்சினை இருக்காது உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் செயல்படுத்தப்பட்டாலும் பொருட்கள் வழங்குவதில் பிரச்சினை இருக்காது உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்
Updated on
1 min read

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. ஆட்சியர் வே.சாந்தா தலைமை வகித்தார்.

விழாவில், தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 90,623 ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, 65 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு அங்கம்தான் பயோமெட்ரிக் திட்டம். காலத்துக்கேற்ப திட்டத்தை செயல்படுத்திதான் ஆக வேண்டும். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. எனவே, பயோமெட்ரிக் திட்டத்தை செயல்படுத்துவதற்கும், எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் மக்கள் பொருட்களை பெறுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயோமெட்ரிக் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் ரேஷன் கடைகளில் மக்களுக்கு பொருட்கள் வழங்குவதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in