

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுசம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஒருநபர் ஆணையத்தின் 23-ம் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், காவலர் குடியிருப்புகளில் வசிப்போர் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம்ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
ஏற்கெனவே, 22 கட்ட விசாரணைநடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 544 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 679 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆணையத்தின் 23-வது கட்டவிசாரணை, தூத்துக்குடி கடற்கரைசாலை அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில், நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 14-ம் தேதி தொடங்கிநடைபெற்று வருகிறது. விசாரணையில் ஆஜராக, தூத்துக்குடி தென்பாகம், மத்தியபாகம் மற்றும்வடபாகம் காவலர் குடியிருப்புகளில் வசிக்கும் 47 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று மதியம் வரை 23 பேர் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தனர். நாளை (டிச.18) வரை விசாரணை நடைபெறுகிறது. விசாரணையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணைய வழக்கறிஞர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது அதிக நபர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.