Published : 12 Dec 2020 03:17 AM
Last Updated : 12 Dec 2020 03:17 AM

மத்திய அரசின் கூட்டு மருத்துவக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

கோவை/ திருப்பூர் / உதகை

கூட்டு மருத்துவக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் நேற்று தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இந்திய மருத்துவச் சங்கத்தின் கோவை கிளை நிர்வாகிகள் கூறியதாவது: ஆயுர்வேத, சித்த, யுனானி மருத்துவப் பிரிவுகளைக் கொண்ட இந்திய மருத்துவக் குழுமம் கடந்த மாதம் ஆயுர்வேத மேற்படிப்புக்கான ஒழுங்கு முறையை வெளியிட்டது.

அதில், 58 வகையான நவீன அறுவைசிகிச்சைகளைப் பட்டியலிட்டு, அவற்றை ஆயுர்வேத மருத்துவர்கள் மேற்கொள்ளலாம் என்று அனுமதியளித்தது.

எவ்வித முன் பயிற்சியுமின்றி ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்வது சாத்தியமற்றது. இதனால் நோயாளி களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். மேலும், நவீன மருத்துவத்தின் வளர்ச்சிக்கும் இது தடையாக இருக்கும். எனவே, மத்திய அரசு கூட்டு மருத்துவக் கொள்கையைக் கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அவசர சிகிச்சை தவிரமற்ற பணிகளைப் புறக்கணித் துள்ளோம்" என்றனர்.

மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்க கிளை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர்

திருப்பூரில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம்நடந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் 150 மருத்துவமனைகளில் பணிபுரியும் 650 மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 6 முதல் மாலை 6 மணி வரை தனியார் மருத்துவமனை, கிளினிக்,ஸ்கேன், பரிசோதனைக் கூடங்கள் செயல்படவில்லை. இருப்பினும், அவசர மற்றும் அறுவை சிகிச்சைகள், பிரசவம் மற்றும் கரோனா சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உதகை

இதே போல நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். தனியார் கிளினிக்குகள் காலை 6 மணி முதல் மூடப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x